இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை-துப்பாக்கி சூடு: இணைய சேவை துண்டிப்பு

Published On 2026-02-10 13:16 IST   |   Update On 2026-02-10 13:16:00 IST
  • 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
  • காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

இம்பால்:

மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குகி, மெய்தி ஆகிய இரு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பா.ஜ.க. அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பா.ஜ.க. அரசு பதவியேற்றது.

இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.

இந்த நிலையில் லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்தது. ஒரு கும்பல் பல சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டன. இந்த சத்தங்களை கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த லிட்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் குகி மற்றும் தங்குல் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள்.

கடந்த 2 நாட்களாக லிட்டன் சரேய்கோங் மற்றும் அண்டை குகி கிராமங்களை விட்டு காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

வன்முறையை தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

Similar News