விருதுநகர் அருகே வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்தார்: அரசு பஸ் டயரில் சிக்கி வாலிபர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பயணத்திற்கு ஏற்றபடி இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம், கீழ்பக்கம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், இரவில் கடைக்குச் சென்று உணவு அருந்தியுள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.
ராமகிருஷ்ணாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அவர் வந்தபோது குண்டும், குழியுமான சாலையால் தவறி கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் அங்கு ராஜபாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் சந்திரசேகர் சிக்கிக் கொண்டார். சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நகமங்கலத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (15 ). இவர் வீட்டிலிருந்து அச்சங்குளம் சென்று கொண்டிருந்த போது கூனம்குளம் கண்மாய் கரையில் இருந்த இலுப்பை மரம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.