செய்திகள்
குன்றத்தூர் அருகே பழுதான வாகனத்தை சரி செய்தபோது பஸ் மோதி டிரைவர் பலி
குன்றத்தூர் அருகே பழுதான வாகனத்தை சரி செய்தபோது பஸ் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
மதுரவாயல் ஜானகி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). வேன் டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேனை ஓட்டிச்சென்றார். குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்றபோது வேன் திடீரென பழுதடைந்தது.
இதையடுத்து அந்த வேனை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். வேனின் பின் பகுதி பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் பிலவேந்திரன் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.