செய்திகள்
நகை பறிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 9 பவுன் நகை பறிப்பு

Published On 2021-10-25 12:26 GMT   |   Update On 2021-10-25 12:26 GMT
ஸ்ரீபெரும்புதூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 73). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது இளைய மகன் சேகர் வீட்டில் தங்கி இருந்தார். அதே பகுதியில் தங்கி இருந்த தனது மூத்த மகன் வீட்டுக்கு நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அலமேலு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டர்சைக்கிளில் அலமேலு அருகில் வந்து ஏன் மாஸ்க் அணியவில்லை?. போலீசார் பார்த்தால் வழக்கு போடுவார்கள் என்று கூறி ஒரு மாஸ்க்கை கொடுத்தனர்.

மேலும் தங்க நகை அணிந்து கொண்டு அலட்சியமாக சென்றால் யாராவது பறித்துச்சென்று விடுவார்கள். ஆகவே கழற்றி பேப்பரில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

மர்மநபர்கள் அலமேலு அணிந்திருந்த 9 பவுன் நகையை பேப்பரில் மடித்து தருவதை போல் நடித்து கல்லை பேப்பரில் மடித்து கொடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். அலமேலு தன்னுடைய மகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பேப்பரில் வெறும் கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரது மகன் சேகர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News