செய்திகள்
ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதி நின்ற கார்

அரச்சலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2021-10-25 09:57 GMT   |   Update On 2021-10-25 09:57 GMT
அரச்சலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் பழையகோட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (25) எலக்ட்ரீசியன். காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூரை சேர்ந்தவர் மாணிக்கம் (23) மெக்கானிக்கல். நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஈரோட்டுக்கு ஒரு வேலை வி‌ஷயமாக நேற்று காரில் வந்தனர்.

பின்னர் ஈரோட்டில் வேலையை முடித்து கொண்டு மீண்டும் திருப்பூர் நோக்கி சென்றனர். காரை பூபதி ஓட்டினார். அவரது அருகில் மாணிக்கம் அமர்ந்து பயணித்தார்.

மொடக்குறிச்சி அருகே உள்ள அரச்சலூர் கண்ணமாபுரம் என்ற பகுதியில் அவர்கள் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பூபதியால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்து காரில் இருந்த பூபதி, மாணிக்கம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

விபத்து பற்றி தெரிய வந்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான பூபதி, மாணிக்கம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.




Tags:    

Similar News