செய்திகள்
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதி

ஈரோடு அம்மாபேட்டையில் தொடர்மழை- 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

Published On 2021-10-24 09:48 IST   |   Update On 2021-10-24 09:48:00 IST
பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான குறிச்சி வயக்காடு பகுதி சித்தார், பூனாட்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாட்சி பாளையம், சுப்பராயன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. வயல்வெளிகளே தெரியாத அளவுக்கு மழைத்தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் மக்காச்சோளம் மற்றும் வாழைகளும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது பயிர்கள் மழையால் சேதமடைகின்றன. எனவே இந்த பகுதியில் குறிச்சி சமத்துவபுரம் முதல் அந்தியூர் மெயின் ரோடு வரை உள்ள ரோட்டிற்கு இடையே மழை நீர் வெளியேறும் வகையில் பாலம் அமைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும். மேலும் தற்போது சேதம் அடைந்து உள்ள பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Similar News