செய்திகள்
மரணம்

அணைக்கட்டு அருகே கத்தியால் கழுத்தை அறுத்து வியாபாரி மரணம்

Published On 2021-10-23 11:14 GMT   |   Update On 2021-10-23 11:14 GMT
அணைக்கட்டு அருகே மதுபோதையில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த ஊசூர் காலனியைச் சேர்ந்தவர் வில்வகுமார் (வயது 48). மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பாத்திரங்களை தெருத்தெருவாக கொண்டு சென்று விற்கும் வியாபாரி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் குடித்து விட்டு மது பாட்டில்களுடன் வீட்டுக்கு வந்தார். ஆனால் வில்வகுமார் தான் வாங்கி வந்த மதுவை குடித்து கொண்டு இருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வில்வகுமார் வீட்டில் இருந்த காய்கறி அறுக்கும் கத்தியை எடுத்து மனைவியை குத்த முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறியபடியே வெளியே ஓடினார்.

போதையில் இருந்த வில்வகுமார் செய்வது தெரியாமல் கையிலிருந்த கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் துடிதுடித்து அதே இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் ஏ.எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா, அரியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அங்கு வந்து வில்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News