செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2021-09-02 04:26 GMT   |   Update On 2021-09-02 04:26 GMT
திருட்டு நடந்த வீட்டை வேலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா சின்ன வாணிதெரு என்கின்ற வள்ளியம்மை தெருவில் வசித்து வருபவர் கவுரி (வயது 60). இவரது கணவர் பழனி ஆசிரியராக பணியாற்றி இறந்து விட்டார்

இவர்களுக்கு தனஞ்செழியன் மற்றும் நிரஞ்சன் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனஞ்செழியன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக தன் கவுரி வீட்டை பூட்டி விட்டு இளைய மகன் நிரஞ்சனுடன் கடந்த 28-ந் தேதி சென்னை சென்றார்.

பின்பு நேற்று பகல் ஒரு மணிக்கு தன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகளை சிதறி போட்டு 50 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் சிங்காரம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு நடந்த வீட்டை வேலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் மோப்ப நாயுடன் திருட்டு சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிக குறுகிய தெரு இந்த தெருவில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளது. அப்படி இருந்தும் மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து 50 பவுன் நகையை திருடிச் சென்றது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News