செய்திகள்
தாக்குதலில் காயமடைந்தவர்கள் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.

சீர்காழி அருகே கட்டுபாட்டை மீறி ஊருக்குள் வந்ததால் ஆத்திரம்: 5 பேர் மீது சரமாரி தாக்குதல்

Published On 2021-08-31 10:08 GMT   |   Update On 2021-08-31 13:24 GMT
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்களான கர்ணன், மாதவன் உள்ளிட்ட ஆறு குடும்பத்தினரை மீனவ கிராமம் தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் அவர்கள் மளிகை கடை, கோவிலுக்கு செல்லகூடாது. கிராம மக்கள் யாரிடனும் பேசக்கூடாது, எந்த ஒரு பொருளும் கொடுத்து வாங்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் தாசில்தார் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கிராம பொறுப்பாளர்கள் கிராம மக்களை அழைத்து பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்து சென்றனர்.

இந்நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை சேர்ந்த 5 பேர் கீழமூவர்கரை கிராமத்துக்குள் வந்தனர். இதனையறிந்த சிலர் அவர்களை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீழமூவர்கரை கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி திருவெண்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News