செய்திகள்
மயிலாடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு தச்சு தொழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது55). தச்சு தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மல்லியம் ரெயில் நிலையம் அருகில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி துரை தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த துரையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.