பஞ்சாயத்து தலைவரின் கணவரை பூட்டி சிறை வைத்த வார்டு உறுப்பினர்கள்
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பஞ்சாயத்து தலைவர் அருந்தவம். இவரது கணவர் கருப்பையா. இவர் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சி செயலாளரை புதிதாக நியமனம் செய்யும் தீர்மானங்களை எழுதிவைத்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார்.
ஆனால் பஞ்சாயத்து தலைவரின் கணவர் அடிக்கடி ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடுவதை கண்டித்து 2-வது வார்டு உறுப்பினர் அய்யம்பெருமாள் தீர்மானம் நோட்டில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே பஞ்சாயத்து தலைவரின் கணவர் கருப்பையா அலுவலகத்தை பூட்டி செல்ல முயன்றார். இதனை அறிந்த வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து தலைவரின் கணவரை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றனர். அதிர்ச்சி அடைந்த கருப்பையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வந்தனர். அவர்கள் கருப்பையாவை திறந்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.