செய்திகள்
கொலை

ஓசூரில் குண்டர் சட்டத்தில் கைதாகி வெளயே வந்த ரவுடி படுகொலை

Published On 2021-06-18 09:23 GMT   |   Update On 2021-06-18 09:23 GMT
ஓசூரில் குண்டர் சட்டத்தில் கைதாகி வெளயே வந்த ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேட்டர பள்ளியை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் அபிலாஷ் (28). பிரபல ரவுடியான இவர்மீது 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனர்.

இவர் நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியில் உள்ள மைதானம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில், அவரது தலை, கழுத்து, கைகள் உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட அபிலாஷ், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை கொலை செய்த வழக்கில், அபிலாஷ் முதல் குற்றவாளி என்பதும், குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிந்து வெளிவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

எனவே, முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும், ஓசூர் டி.எஸ்.பி.முரளி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News