செய்திகள்
சாலையில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 237 பேர் மீது வழக்குப்பதிவு - 226 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-05-26 17:19 IST   |   Update On 2021-05-26 17:19:00 IST
நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 237 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பால், மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் நேற்று 2-வது நாளாக நாகை கடைத்தெரு, நீலாவீதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்டவைகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும், மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களின், வாகனங்களை பறிமுதல் சென்றனர். அதன்படி நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி 217 மோட்டார் சைக்கிள்களும், 4 சக்கர வாகனங்கள் 9 என மொத்தம் 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 237 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News