வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 55) தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது பேரன்களான விஸ்வா, மணிகண்டன் ஆகியோருடன் வேதாரண்யம் அடுத்த அவரி காட்டில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இடி-மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் காளிதாஸ் அங்குள்ள கொட்டகைக்கு சென்றார். அப்போது வாசலில் நின்று செங்கல் ஏதும் சேதமாகிறதா? என பார்த்தார். அந்த நேரத்தில் திடீரென காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே காளிதாஸ் இறந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற விஸ்வாவுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த விஸ்வா சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.