செய்திகள்
வழக்கு பதிவு

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது வழக்கு

Published On 2021-05-18 13:04 GMT   |   Update On 2021-05-18 13:04 GMT
நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.மேலும் கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்வோரை அனுமதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை 24 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News