செய்திகள்
திருவந்திபுரம் கோவில் அருகே முழு ஊரடங்கிலும் திருமணம் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் முன்பு நடந்த திருமணங்கள்

Published On 2021-04-25 14:10 IST   |   Update On 2021-04-25 14:10:00 IST
முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் திருவந்தபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் முன்பு உள்ள சாலையில் நடைபெற்றது.

கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் திருமண மண்டபங்கள் இயங்கிவருகிறது.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற்றால் கோவிலில் உள்ள கூடத்தில் திருமணம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக குறைந்த பட்சம் முகூர்த்த நாட்களில் 100 முதல் அதிகபட்சமாக 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன.

தற்போது தொற்று நோய் நாளுக்கு நாள் கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவநாத சாமி கோவில் எதிர்புறத்தில் உள்ள மலையில் திருமண கூடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை என ஏற்கனவே கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோவில் சுற்றியுள்ள தனியார் மண்டபத்தில் பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றது. இதற்கு உரிய ஆவணங்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் காண்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்களில் அனைத்து சடங்குகளும் முடிக்கப்பட்டு மணமக்கள் ஊர்வலமாக வருகை தந்து கோவில் வெளியில் மூடப்பட்டதோடு, கோவில் வளாகத்திற்குள் வர முடியாத அளவிற்கு இரும்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையிலும் கோவில் வெளிப்புறத்தில் சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டனர். ஒரு சிலர் கோவில் முன்பு உள்ள சாலையில் அனைத்து சடங்குகளும் செய்து திருமணம் செய்து கொண்டு சென்றதையும் காணமுடிந்தது.

இந்தநிலையில் அங்கு கூட்டம் கூடாத வகையில் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததை காணமுடிந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் திருவந்தபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் முன்பு உள்ள சாலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News