அஜித் பவாரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு- ஜனாதிபதி இரங்கல்
- அஜித் பவாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித் பவாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது. அஜித் பவாரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கூட்டுறவுத் துறையில், பவார் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் உயிர் இழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த வலியைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என்று கூறியுள்ளார்.