புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்த தி.மு.க-அ.தி.மு.க.வினர் கைது
திருச்சி:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மச்சுவாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற பறக்கும்படையினர் மச்சுவாடி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பழனி, சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 500 பணம், அ.தி. மு.க. துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விராலிமலை தொகுதிக்குட்பட்ட ராஜாளிப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க.வை சேர்ந்த மணி, அ.தி.மு.க.வை சேர்ந்த முருகேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடியில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.