செய்திகள்
நாகையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நாகையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் சேமிக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நாகையில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயிலில் 1,000 டன் சன்னரக நெல் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நாகை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ெரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.