செய்திகள்
கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேட்ஜ் அணிந்து சிபிசிஎல் ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
நாகையை அடுத்த பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தால் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை உத்தரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூர்வமாக பணி வழங்க கோரியும் சி.பி.சி.எல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சி.பி.சி.எல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு ‘பேட்ஜ்’ அணிந்து சி.பி.சி.எல் ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.