செய்திகள்
விபத்து

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மீனவர் பலி

Published On 2021-03-29 23:31 IST   |   Update On 2021-03-29 23:31:00 IST
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மீனவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பரும் படுகாயம் அடைந்தார்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருடைய மகன் சந்துரு (வயது18). அதே ஊரை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன் (21). இருவரும் மீனவர்கள். நண்பர்களாக இவர்கள் 2 பேரும் வெள்ளப்பள்ளத்தில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்டி சென்றார். அப்போது வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி எடை மேடு அருகே சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சந்துரு, கலைச்செல்வன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கலைச்செல்வன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News