செய்திகள்
சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு - பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
நாகையை அடுத்த பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(சி.பி.சி.எல்.) இயங்கிவந்தது. இந்த ஆலையில் தற்போது விரிவாக்கம் செய்ய உள்ள காரணமாக 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், எஞ்சிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிக்காலம் முடிவடையும் வரை உத்தரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூர்வ பணி வழங்க கோரியும்சி.பி.சி.எல். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சி.பி.சி.எல். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேட்ஜ் அணிந்து சி.பி.சி.எல். ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.பின்னர் அனைவரும் பணியில் ஈடுபட்டனர்.