செய்திகள்
விஷவாயு தாக்கி 3 பேர் பலியான வழக்கில் இருவர் கைது
விஷவாயு தாக்கி 3 பேர் பலியான வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வந்தது. இங்கு உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, பாக்கியராஜ், (வயது 40) முருகன், (42) மற்றும் ஆறுமுகம், (50) ஆகியோர் விஷவாயு தாக்கி இறந்தனர்.
இது சம்பந்தமாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக உணவு தயாரிக்கும் மையம் நடத்தி வந்த ஆவடியை சேர்ந்த வெங்கடேசன் (38) மற்றும் இடத்தின் உரிமையாளர் கோவில்பட்டி தாலுகா துறையூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் (40) ஆகிய இருவரையும் சோமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.