செய்திகள்
காவிரி குடிநீர் வரும் குழாயின் மூடியில் விசில்

குழாயில் தண்ணீர் வரும் பின்னே..., விசில் சத்தம் வரும் முன்னே...

Published On 2020-12-10 14:19 IST   |   Update On 2020-12-10 14:19:00 IST
பொது மக்கள் குடிநீர் குழாயடியில் காத்திருக்கும் நிலைக்கு தீர்வாக கந்தர்வக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையும், ஒரு சில பகுதிகளில் வாரம் ஒரு முறையும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது வரும் என்ற நேரக்கணக்கீடு எதுவும் கிடையாது. மேலும் அடிக்கடி குழாயில் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதும் இயல்பு. இதனால் பொது மக்கள் குடிநீர் குழாயடியில் காத்திருக்கும் நிலை இன்றளவும் உள்ளது.

இதற்கு தீர்வு காண கந்தர்வக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாலமுருகன் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார். அதாவது காவிரி குடிநீர் வரும் குழாயின் மூடியில் விசில் ஒன்றை பொருத்தியுள்ளார். பொதுவாக குழாயில் தண்ணீர் வருவதற்கு முன்பு காற்று வரும். அதன் மூலமாக குடிநீர் வருவதை 15 நிமிடங்களுக்கு முன்னதாக அடிக்கும் விசில் சத்தம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

எனவே தண்ணீருக்கு நள்ளிரவு வரை காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுவதோடு, தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படும் என்றார். இதனை அரசே ஏற்று செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Similar News