செய்திகள்
தற்கொலை

மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு பைனான்சியர் தற்கொலை

Published On 2020-09-01 12:48 IST   |   Update On 2020-09-01 12:48:00 IST
மயிலாடுதுறையில், கரூரை சேர்ந்த பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நெடுங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் லட்சுமணன்(வயது 24). இவர், மயிலாடுதுறை பட்டமங்கல ஆராய தெருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். தனது அக்காள் கணவர் தங்கராஜ் என்பவருடன் சேர்ந்து லட்சுமணன், மயிலாடுதுறை பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் வாயில் புண் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் அது புற்றுநோய் என தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமணன் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர், மயிலாடுதுறையில் தான் தங்கி இருந்த அறையில் மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் நீண்ட நேரம் அவர் தங்கி இருந்த அறையில் இருந்து லட்சுமணன் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் அவரது அக்காள் கணவர் தங்கராஜிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தங்கராஜ் மற்றும் அங்கிருந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, லட்சுமணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News