செய்திகள்
வீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
கீரப்பாளையம் ஒன்றியத்தில் வீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வடஹரிராஜபுரம், பரதூர் ஊராட்சி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வீடு கட்டும் திட்டத்திலும், கழிவறை கட்டும் திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது பயனாளி வீடு கட்டாமலேயே அவர் வீடு கட்டியதாக பணத்தை வேறு ஒருவர் வங்கிக்கணக்கில் செலுத்தி மோசடி செய்து எடுத்துள்ளனர். ஆகவே இந்த முறைகேடுகளை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.