செய்திகள்
கோப்புபடம்

மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: மேற்பார்வையாளர் பலி

Published On 2020-08-04 13:03 GMT   |   Update On 2020-08-04 13:03 GMT
மாங்காடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட மேற்பார்வையாளர் பலியானார்.
பூந்தமல்லி:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, லட்சுமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 37). கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சர்வீஸ் சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த செல்வராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News