செய்திகள்
பலி

மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அதிர்ச்சியில் பலி

Published On 2020-07-21 14:44 IST   |   Update On 2020-07-21 14:44:00 IST
காஞ்சீபுரத்தில் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:

சின்ன காஞ்சீபுரம் அமுதுபடி பின்தெருவை சேர்ந்தவர் ராமு யாதவ் (வயது 79). கடலூர் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ராஜேஸ்வரி (67). இவர்களுக்கு வேலு, வரதராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் வரதராஜன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், ராமு யாதவ் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சியடைந்த ராமு யாதவ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் அமர்ந்தபடியே எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார். இதை அறிந்த அருகாமையில் வசித்து வந்த அவரது மகன் உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராமு யாதவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News