செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-26 14:44 IST   |   Update On 2020-05-26 14:44:00 IST
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:

கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தடுப்பூ ஊசி கண்டுபிடிக்காத நிலையில் உலகநாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க பொதுமுடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு முதல்-அமைச்சர் பழனிசாமி படிபடியாக தளர்வுகளை அறிவித்து வருகிறார். இதனால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அந்த அந்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 10,817 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடலூர் முதுநகர் பகுதிக்கு வந்தனர். அவர்களை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சென்னையில் இருந்து வந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் 432 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று 140 பேரின் முடிவுகள் நிலுவையில் இருந்தது. அதில் கடலூர் மாவட்டம் தண்டபாணி நகரை சேர்ந்த 30 வயது லேப்டெக்னீசியன் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்தனர். அந்த பெண் வசித்த தண்டபாணி நகரை சீல்வைத்து தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த என்.எல்.சி. ஊழியர் ஒருவர் கடந்த வாரம் விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டாக்டர்கள் அவரை சொந்த ஊரில் தனிமைப்படுத்த அறிவுறுத்தினார். அதன்படி நெய்வேலியில் உள்ள அவரது வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

சுகாதார ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவர் வசிக்கும் தெருவில் கிருமிநாசினி தெளித்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 434 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 417 பேர் குனமாகி வீடு திரும்பி உள்ளனர். 16 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News