சிவகங்கையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம்- கலெக்டர் வழங்கினார்
சிவகங்கை:
சிவகங்கை நகர்ப்ப குதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கும் வகையிலான ஓரக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பொது மக்களுக்கு ஓரக்கசாயம் மற்றும் பத்து கிராம் பாக்கெட் சுவாசப்பொடி ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து இடங்களிலும் இருந்து வருவதால் இந்தக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை பல்வேறு கட்ட தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் பொது மக்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.
அந்தவகையில் மேலும் பொதுமக்களுக்கு நோய் தாக்காமல் இருக்க ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமான ஒன்றான நோய் எதிர்ப்புச்சக்தி ஒவ்வொருவரின் உடம்பிலும் இருக்கும் வகையில் அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றன.
தொடர்ந்து சித்தா மருத்துவத்துறையின் மூலம் கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஓரக்கசாயம் மற்றும் சுவாசப்பொடி வழங்கப்படுகிறது.
ஓரக் கசாயம் ஒவ்வொருவரும் 10 எம்எல் வீதம் 3 நாள் பருக வேண்டும். சுவாசப்பொடியை தொண்டைப்பகுதியில் வைத்து உமிழ்நீராகப் பருக வேண்டும். உடம்பிலுள்ள சளி, இருமல் நீங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வழங்கும் சித்தா மருத்துவத்துறையின் மருந்துகளை முழுமையாக பயன்படுத்தி நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் இராசி இயற்கை உணவுகள் பயிற்சி மையம் மூலம் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்ட ஓரக்கசாயம் மற்றும் சுவாசப் பொடியினை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, சிவகங்கை நகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ராசி இயற்கை உணவுகள் பயிற்சி மைய மேலாளர்கள் சரவணன், ராஜரீகா, சமூக ஆர்வலர் அயோத்தி, சிவகங்கை அரண்மனை இளைய மன்னர் மகேஷ் துரை, கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை சங்கத் தலைவர் ஆனந்தன், சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.