செய்திகள்
குழந்தை விழுந்து பலியான தண்ணீர் தொட்டி. குழந்தை எழிலன்

காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது ஆண் குழந்தை பலி

Published On 2020-02-21 09:52 GMT   |   Update On 2020-02-21 09:52 GMT
காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனப்பாக்கம்:

வாலாஜா அடுத்த காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. தம்பதியின் மகள் தர்ஷினி (4). ஒரு வயது ஆண் குழந்தை எழிலன்.

இவர்களது வீட்டின் வாசல் அருகே தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். நேற்று மாலை ஐஸ்வர்யா குழந்தை எழிலனை வீட்டில் தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அந்த நேரத்தில் கண் விழித்த குழந்தை தவழ்ந்து தண்ணீர் தொட்டி அருகே வந்தது. திடீரென தொட்டிக்குள் தவறி விழுந்து தத்தளித்தது. அப்போது வீடு திரும்பிய ஐஸ்வர்யா குழந்தை தண்ணீர் தொட்டியில் கிடப்பதை கண்டு திடுக்கிட்டு தூக்கினார்.

உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மேல்விஷாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை எழிலன் இரவு பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீட்டின் அருகே தண்ணீர் தொட்டிகள் இருந்தால் அதனை மூடி வைக்க வேண்டும். குழந்தைகளை தண்ணீர் தொட்டி அருகே விளையாட அனுமதிக்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News