செய்திகள்
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேவகோட்டை:
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது நோயாளிகள், ஆஸ்பத்திரியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக எம்.பி.யிடம் கூறினர். அதனை தொடர்ந்து வெளி நோயாளிகள் பிரிவை பார்வையிட்டனர். மேலும் பிரசவ வார்டு, ஆஸ்பத்திரி கட்டிடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மிகவும் பழமையாக உள்ள இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தை மராமத்து செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும் இங்குள்ள நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் காரைக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் பாப்பாங்கோட்டை பூமிநாதன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் வேலுச்சாமி, ஜான்சிராணி, நகர தலைவர் லோகநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன், ஐகோர்ட்டு வக்கீல் சஞ்சய், சிறுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், வள்ளாளமோகன், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.