செய்திகள்
மஞ்சூர்-கோவை சாலையில் உலா வந்த காட்டுயானை களை படத்தில் காணலாம்.

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள்

Published On 2019-12-28 17:59 GMT   |   Update On 2019-12-28 17:59 GMT
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டுயானைகள் வழிமறித்தன. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
மஞ்சூர்:

ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக கோவைக்கு பிரதான சாலை செல்கிறது. இதேபோன்று கோத்தகிரி வழியாக மற்றொரு சாலை உள்ளது. மேலும் மஞ்சூர் வழியாக 3-வது சாலை இருக்கிறது. அந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. அங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். எனவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் அடிக்கடி மஞ்சூர்-கோவை சாலையில் உலா வருகின்றன. இதனால் அந்த சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கெத்தை அருகில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, குட்டியுடன் 2 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் பீதியடைந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதேபோல் பின்னால் வந்த சுற்றுலா வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சிறிது நேரம் சாலையிலேயே காட்டுயானைகள் உலா வந்தன.

சுமார் 20 மீட்டர் தூரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டுயானைகள், அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இந்த சாலையில் காட்டுயானைகள் உலா வருவது வழக்கமாகி வருகிறது. அவை அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை மறித்து வருகின்றன. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே மஞ்சூர்-கோவை சாலைக்கு காட்டுயானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News