திருப்போரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த மடையத்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் ஏழுமலை.
இவர் கண்ணகப்பட்டு பகுதியில் உள்ள அரசு மதுக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு 10 மணிக்கு ஏழுமலை கடையை பூட்டி விட்டு வசூலான பணம் ரூ. 2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
மடையத்தூர் ஏரி அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தடுத்து நிறுத்தினர். இதில் நிலை தடுமாறி ஏழுமலை கீழே விழுந்தார். மர்ம நபர்கள் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ஏழுமலை வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.
பொன்னேரியை அடுத்த கொக்குமேடு பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இது போல் அருகில் உள்ள குரும்பத்தூரில் புஷ்பா என்பவருடைய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த 2 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
பொன்னேரியை அடுத்த தசரத நகரை சேர்ந்தவர் காளமேகம் வக்கீல். நள்ளிரவு இவருடைய வீட்டின் பூட்டை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்தார். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபோல், பரமேஸ்வரன் என்ற வக்கீல் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது. சத்தம் கேட்டு அங்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.