செய்திகள்
கடத்தல்

அரியலூர் அருகே கல்லூரி மாணவரை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்

Published On 2019-10-17 10:24 GMT   |   Update On 2019-10-17 10:24 GMT
அரியலூர் அருகே கல்லூரி மாணவரை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவரது மகன் பிரேம்குமார் (20). அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் பெற்றோரிடம் கூறிவிட்டு சிவக்குமார் கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் குறித்த நேரத்தில் அவர் வீடு திரும்பவில்லை.

வெகுநேரம் ஆகியும் கல்லூரி முடிந்தும் மகன் வீட்டிற்கு வராததால் தந்தை சிவக்குமார் மகனின் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். நண்பர்களும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து கல்லூரிக்கு சென்று விசாரித்துள்ளார். கல்லூரி ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை பார்த்து பிரேம் குமார் கல்லூரிக்கு வரவில்லை என்று சொன்னதும் சிவக்குமார் அதிர்ச்சியடைந்தார்.

இதற்கிடையே மகனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே அருகில் உள்ள ஜெயங்கொண்டம் போலீசில் மகனை காணவில்லை என்று புகார் அளித்ததார். மறுநாள் காலையில் தந்தை சிவக்குமாருக்கு பிரேம் குமார் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மகன்தான் பேசுகிறான் என்று ஆவலுடன் பேசினார்.

ஆனால் போனில் வேறு ஒரு நபர் பேசியுள்ளார். உன் மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன் உடனடியாக ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் உன் மகனை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் சிவக்குமார் கூறினார். அதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. மோகன்தாஸ் தலைமையில் குழு அமைத்து கல்லூரி மாணவரை கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News