செய்திகள்
கோப்பு படம்

எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த புதுப்பெண் 4 நாளில் தற்கொலை - காரணம் இதுதான்

Published On 2019-10-16 05:16 GMT   |   Update On 2019-10-16 05:16 GMT
செந்துறை அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்த பெண் 4 நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மகள் நிஷா (வயது 20). அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பி.ஏ. படித்து வந்தார்.

இவர் தனது அக்காள் கணவரின் தம்பியான துளார் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் பிரகாஷ் (32) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதற்கு இருவரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படிக்கும் வயதில் உனக்கு காதல் தேவையா? நீ நினைத்தது நடக்காது என்றும் எச்சரித்தனர்.

ஆனாலும் எதிர்ப்பை மீறி கடந்த 11.10.19-ந்தேதி பிரகாசை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது கிராமத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த நிஷாவின் தாய் அமுதா, ஏன் இப்படி செய்தாய்? இதற்கு தான் நாங்கள் உன்னை வளர்த்து படிக்க வைத்தோமா? என்று திட்டினார்.

உறவினர்கள் பலரது முன்னிலையில் தாய் திட்டியதால் மனம் உடைந்த நிஷா வேகமாக வீட்டிற்குள் சென்று தனி அறையின் கதவை தாழிட்டார். பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட உறவினர்கள் நிஷாவை உடனடியாக மீட்டு மனக்குடையான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிஷாவுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆனதால் இது குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News