செய்திகள்
மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 மணி நேரம் பெய்த கனமழை

Published On 2019-09-24 08:57 GMT   |   Update On 2019-09-24 08:57 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நேற்று இரவு கனமழை பெய்தது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

நேற்று இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருமயம், கறம்பக்குடி, பெருங்களூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பெரும் பாலான பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை மேல ராஜவீதியில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாய்கால்கள் சரி செய்யபடாததால் சாலைகளில் மழை நீர் ஓடியதாலும், ஒருமணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கன மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News