செய்திகள்
விஜய பிரபாகரன்

விஜயகாந்த் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து வருவார்- விஜய பிரபாகரன்

Published On 2019-08-26 07:49 GMT   |   Update On 2019-08-26 07:49 GMT
வரும் ஜனவரி மாதம் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் வருவார் என்று அவருடைய மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாட்டிலேயே தன்னுடைய பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் ஒரே தலைவர் விஜயகாந்த் தான். அவர் நினைத்தால் மற்றவர்களை போல கொண்டாட முடியும். ஆனால் தன்னுடைய பிறந்த நாளில் ஏழைகள் பயன்பெற வேண்டும் என நினைக்கிறார்.



எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுமென்றே விஜயகாந்த் உடல் நிலை குறித்து பொது மக்களிடம் வதந்தி பரப்பி வருகின்றனர்.

வரும் ஜனவரி மாதம் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் வருவார் என்றார். அப்போது விஜயபிரபாகரன் கண்கலங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவர் பேசுகையில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பிரேமலதா கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியுடன் அயராது உழைத்து கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News