செய்திகள்
ஊசூர் அருகே சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
வேலூர் அடுத்த ஊசூரில் சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த ஊசூரில் இருந்து சிவ நாதபுரம் செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலை மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த சாலை வழியாக குருமலை வெள்ளக்கல் மழை நச்சு மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்கின்றனர். சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சிவ நாதபுரத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல மாதங்களாக சாலை சேதமடைந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.