நாட்டறம்பள்ளி அருகே தரமான சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி பச்சூர் அருகே உள்ள கோமட்டியூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தார் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
கடந்த 5 நாட்களாக இப்பகுதிக்கு தார்சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக போடப்பட்டு வரும் தார் சாலை தரமற்ற நிலையில் இல்லை என்று கூறி கோமட்டியூர் பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறிதது தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
எங்கள் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தார் சாலை போடப்பட்டு வருகிறது. புதியதாக போடப்படும் தார்சாலை தரமான நிலையில் இல்லை. 2 நாட்கள் பெய்த மழையிலேயே சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகிறது. இவ்வாறு இருந்தால் தார் சாலை நீண்ட காலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராது எனவே தரமான முறையில் தார்சாலையை போட வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.