செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டுசக்கர குப்பம் வாணியம்பாடி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில், வினாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சென்று வழிபட்டு காணிக்கை செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.