செய்திகள்
33 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அரசு தலைமை கொறடா வழங்கினார்
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா அரியலூரில் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா அரியலூரில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் 33 மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 76 ஆயிரத்து 660 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். விழாவில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தங்க நாணயங்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி கைக்கடிகாரம் வழங்கப்பட்டது.
இதில் அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி, முடநீக்க வல்லுனர் ராமன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.