செய்திகள்

ஆட்டோ டிரைவரை கொல்ல அரிவாளுடன் வந்த கும்பல் - பொது மக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

Published On 2019-05-20 07:05 GMT   |   Update On 2019-05-20 07:05 GMT
ஆட்டோ டிரைவரை கொல்ல அரிவாளுடன் வந்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

சென்னை, மூலகொத்தளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தி சவாரி ஏற்றி வந்தார்.

இந்த நிலையில் ஆட்டோவில் சவாரி ஏற்றுவது தொடர்பாக அர்ஜூனனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் ஆனந்த் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவரிகளிடம் மற்ற ஆட்டோ டிரைவர்கள் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

இதற்கிடையே நேற்று இரவு 7 பேர் கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மூலகொத்தளம் பகுதியில் சுற்றினர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் 3 வாலிபர்கள் மூலகொத்தளத்தில் உள்ள சுடுகாட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சுடுகாட்டுக்குள் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், டேனியல், வடிவேல் என்பது தெரிந்தது.

சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் அர்ஜூனனை கொல்ல திட்டமிட்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News