செய்திகள்

ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - பாஜக கோரிக்கை

Published On 2019-05-18 16:41 GMT   |   Update On 2019-05-18 16:41 GMT
புதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கடை வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் ரவுடிகளால் மாமூல் வசூலிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது மாமூல் வேட்டைகளுக்கு சென்று ரவுடிகள் மாமூல் வசூலிப்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதோடு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தடைபட்டு வருகிறது.

ரவுடிகளின் ராஜ்ஜியமாக புதுவை மாறி வருவதை வில்லியனூர் சம்பவம் உறுதி செய்கிறது.

இச்சம்பவத்தில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் மீது 144 சட்டத்தை போட்டு அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.

வணிகர்களிடமும், சிறு, சிறு தொழில் செய்வோரிடமும் மாமூல் வசூல் செய்யும் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

புதுவை மாநிலத்தில் தற்போது தொழில்கள் நலிவடைந்த நிலையில் வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார வரி, தொழில் வரி, குப்பை வரி என அனைத்துக்கும் அதிக அளவில் வரிவசூல் செய்வதோடு புதிதாக மாமூல் வசூல் என்ற வரியையும் வணிகர்களிடம் வசூலிப்பது நியாயமா? இந்த நிலை நீடித்தால் புதுவை மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

தற்போது காவல்துறையில் குறுக்கிடும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோதமான 3 நம்பர் ஆன்-லைன் லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவற்றை எல்லாம் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்து பணியை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News