செய்திகள்

சோழிங்கநல்லூரில் ஏ.டி.எம். கொள்ளையன் பிடிபட்டார்- நண்பருக்கு வலைவீச்சு

Published On 2019-05-09 15:29 GMT   |   Update On 2019-05-09 15:29 GMT
சோழிங்கநல்லூரில் ஏ.டி.எம். கொள்ளையன் பிடிபட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் (வயது 47) தனது நண்பருடன் தங்கி இருந்தார். நேற்று காலை அவர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வெளியே வரும்போது அவர்களது பையில் இருந்து ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த விடுதி ஊழியர் சந்தேகத்தின் பேரில் பீட்டரை பிடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தார்.

அவருடன் தங்கி இருந்த அவரது நண்பர் தப்பி ஓடி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர்கள் போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.10 லட்சம் இந்திய பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படும் ‘ஸ்கிம்மர்’ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். எந்தெந்த ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்?. எவ்வளவு பணம் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News