ஆண்டிப்பட்டி அருகே வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்து நகை-பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது
ஆண்டிப்பட்டி:
கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் அனீஸ் குமார் (வயது 25). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக தினக்கூலி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நாகர்கோவிலுக்கு சென்றார்.
பின்னர் மீண்டும் அவர்கள் மூணாறு திரும்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் அனீஸ்குமார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக இறங்கி விட்டார்.
பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தபோது 3 வாலிபர்கள் அவரிடம் வந்து அழகான பெண் உல்லாசத்துக்கு இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவருடன் சந்தோசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதனை நம்பி அனீஸ்குமார் அவர்களுடன் சென்றார். ரெயில்வே கேட் அருகே வந்ததும் திடீரென அவர்கள் அனீஸ்குமாரை பீர் பாட்டிலால் தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த மோதிரம், செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி விட்டனர்.
படுகாயங்களுடன் ஊருக்கு சென்ற அனீஸ்குமார் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), முல்லை நகரத்தைச் சேர்ந்த மனோ ஆனந்த் (32), போடியைச் சேர்ந்த மாரிமுத்து (24) ஆகிய 3 பேர் தான் அனீஸ்குமாரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களையும் பறிமுதல் செய்து அனீஸ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
மாரிமுத்துவும், கார்த்தியும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த மனோ ஆனந்த் பல வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.