செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.37 லட்சம் நகை,பணம் கொள்ளை

Published On 2019-04-30 11:26 GMT   |   Update On 2019-04-30 11:26 GMT
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.37 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள நாராயணபுரம் எம்.எம்.எம். ரெட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 55). தொழிலதிபர். இவர் தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் மைசூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். 4 பீரோக்களில் இருந்த 65 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள், வைர கம்மல்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

நேற்று காலை ஜோதீஸ்வரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டியிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜோதீஸ்வரனுக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து ஜோதீஸ்வரன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பத்தூர் டி.எஸ்.பி.தங்கவேலு, ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தது பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News