செய்திகள்

திசையன்விளையில் பள்ளி நிர்வாகி கார் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் பலி

Published On 2019-04-27 11:13 GMT   |   Update On 2019-04-27 11:13 GMT
திசையன்விளையில் பள்ளி நிர்வாகி கார் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதை அறிந்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திசையன்விளை:

திசையன் விளைமணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீஜன் (வயது 13).இவர்கள் குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீஜன் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஸ்ரீஜன் திசையன்விளையில் தனது பாட்டி வீட்டுக்கு வந்தான். மாலையில் சைக்கிளில் திசையன்விளை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தான்.

அப்போது, பின்னால் தனியார் பள்ளி நிர்வாகி வந்த கார் அவன் மீது மோதியது. இதில் ஸ்ரீஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து ஸ்ரீஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் சரண்ராஜை (25) கைது செய்தனர்.

இதனிடையே மாணவன் ஸ்ரீஜன் காயமடைந்த நிலையில் கிடக்கும்போது அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி நிர்வாகி உதவவில்லையாம்.

இதை அறிந்த ஸ்ரீஜனின் உறவினர்கள் இன்று காலை மணலிவிளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.

தனியார் பள்ளி நிர்வாகியை கண்டித்தும், சிறுவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு திசையன்விளை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News