அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள மின்னல் இந்திராநகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வினியோகிக்கபட வில்லை.
இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அன்வர்திக்கான்பேட்டை மின்னல் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அரக்கோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேல் லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
மேலும் பயன்படுத்த படாமல் இருந்த பைப்லைனை சரிசெய்து தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குடங்களில் குடிநீர் பிடித்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.