செய்திகள்
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
மதுரை:
மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் இன்று இரவு புகார் எழுந்தது.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கு வந்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மர்ம நபர் நகல் எடுத்ததாக தகவல் பரவியதும் தி.மு.க.-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர் குவிந்தனர். தொடர்ந்து அறையின் சிசிடிவி காட்சிகளை காண்பிக்கவும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency